Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பஸ் நிலையத்தில் குடியிருப்பு தண்ணீர் புகுவது... தடுக்கப்படுமா? வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை தேவை

பஸ் நிலையத்தில் குடியிருப்பு தண்ணீர் புகுவது... தடுக்கப்படுமா? வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை தேவை

பஸ் நிலையத்தில் குடியிருப்பு தண்ணீர் புகுவது... தடுக்கப்படுமா? வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை தேவை

பஸ் நிலையத்தில் குடியிருப்பு தண்ணீர் புகுவது... தடுக்கப்படுமா? வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை தேவை

ADDED : அக் 03, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குடியிருப்புகளின்தண்ணீர் புகுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக சாலை போக்குவரத்தின் இதயப் பகுதியாக விழுப்புரம் நகரம் உள்ளது. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் விழுப்புரத்தில், புதுச்சேரி சாலையில் சிறிய இடத்தில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இதனால், கடும் இட நெருக்கடி நிலவி வந்தது.

இதையடுத்து, கடந்த 2000ம் ஆண்டு சென்னை - திருச்சி சாலையில், 15 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டி திறக்கப்பட்டது.

இந்த பஸ் நிலையம் கட்டப்பட்ட நாள் முதல், இதுவரை மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்து ஏரி போன்று காட்சியளிக்கின்றது. இப்பிரச்னைக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சுதாகர் நகர் வழியாக செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டதால், அது இருந்த இடம் தெரியாமல் மாயமானது.

இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு நவ., 10ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கால்வாய் அமைக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு, எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரே இரவில் பெய் த மழையால், புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கு பேரிடர் மேலாண்மை துறை நிதியில் இரண்டு மெகா சைஸ் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ராட்சத மின் மோட்டார்கள் வைத்து, மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய பஸ் நிலையத்தில் பெய்யும் மழைநீர் மட்டும் சூழ்ந்தால் உடனடியாக அகற்றிவிடலாம். அதற்கு மாறாக, புதிய பஸ் நிலையத்தையொட்டியுள்ள மற்றும் பின்புறமுள்ள குடியிருப்பு தண்ணீர் இங்கு புகுந்துவிடுகின்றது.

இதனால், பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதை தடுக்க, புதிய பஸ் நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்புகளில் வடிகால் வாய்க்கால் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால், பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் சில மணி நேரத்தில் வெளியேற்ற முடியும்.

எனவே, பஸ் நிலையத்திற்குள் குடியிருப்பு மழைநீர் புகுவதை தடுக்க கலெக்டர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us