/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்' 'ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்'
'ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்'
'ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்'
'ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்'
ADDED : ஜூன் 30, 2024 06:03 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என மேயர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், ஏராளமான பள்ளி, கல்லுாரிகளும் உள்ளன.
தொழிலாளர்கள், மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கிறன. மேலும் அதிக அளவிலான கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன. அதே சமயத்தில் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை உடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் கவுன்சில் கூடத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ரத வீதிகள் உள்ளிட்ட முக்கிய ரோடுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து சமீபத்தில் சிவகாசி சிவன் கோயில் ரத வீதிகள், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. திருத்தங்கலில் தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதுகுறித்து மேயர் சங்கீதா கூறுகையில், சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ரோட்டோரத்தில் செயல்பட்ட கடைகள் அகற்றப்பட்டு, நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
காய்கறி மார்க்கெட் பகுதியில் நெரிசலை குறைக்க வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய புதிய வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் சுற்றுச்சாலை அமைக்கப்படும் என கடந்த சட்டசபை கூட்ட தொடரில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேபோல் மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.