Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஜல்ஜீவன் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என புகார்

ஜல்ஜீவன் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என புகார்

ஜல்ஜீவன் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என புகார்

ஜல்ஜீவன் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என புகார்

ADDED : ஜன 21, 2024 03:10 AM


Google News
நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 1.27 கோடி வீடுகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சிவகாசி வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் அருப்புக்கோட்டை காரியாபட்டி நரிக்குடி திருச்சுழியில் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 450க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் நோக்கமான 2024ம் ஆண்டுக்குள்பணிகளை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் ஜல் ஜீவன் திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளில் உள்ள 39 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர்குழாய்கள் இணைப்பு வழங்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

மாவட்டத்திலுள்ள மற்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மிக விரைவில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

சில கிராமங்களில் 100 சதவீத பணிகள் முடிந்து குடிநீர் சப்ளை நடக்கும் நிலையில், புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கால தாமதம் ஏற்படுகிறது. அத்தகைய வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பட்சத்தில் 100 சதவீதம் பணிகள் நிறைவடையும்.

பல கிராமங்களில் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டாலும் போதிய அளவிற்கு குடிநீர் கிடைப்பதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர கதியில் பணிகளை செய்வதைவிட, போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் வகையிலும், உள்ளூர் நீர் ஆதாரத்தின் மூலம் தினமும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us