ADDED : அக் 22, 2025 01:00 AM
பாரில் டூவீலருக்கு தீவைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் காளைப்பூ 19, தேவகோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ண சஞ்சய் 19, இருவரும் நேற்று முன்தினம் இரவில் சின்ன கடை பஜாரில் உள்ள ஒரு மதுபான பாரில் போதையில் தகராறு செய்துள்ளனர். இதனை பார் ஊழியர் லட்சுமணன் கண்டித்து இருவரையும் வெளியேற்றி விட்டு, பார் ரிசப்ஷன் பகுதியில் துாங்கி உள்ளார். இந்நிலையில் அதிகாலை 2:30 மணிக்கு இருவரும் பாரில் நுழைந்து அங்கிருந்த ஒரு டூவீலருக்கும், பாருக்கும் தீ வைத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஸ்ரீவி., டவுன் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
பட்டாசு தொழிலாளி தற்கொலை
சாத்துார்: தாயில்பட்டியை சேர்ந்தவர் வீரராகவன் மகன் மணிகண்டன், 19. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று மதியம் 2:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பட்டாசு கடை கூரையில் வேஷ்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
275 பேர் மீது வழக்கு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளியான நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 85 பேர் மீது வழக்கு பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் மது அருந்திய 190 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தீ வைப்பு; சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்தவர் லோடுமேன் விண்ணரசன் 23. இவருக்கும் செல்வகணேஷ் என்பவருக்கும் தொழிலில் முன்பகை இருந்தது. செல்வகணேஷ் நண்பர்களான சூர்யபிரகாஷ் 18, பிரவீன்ராஜ் 18, 17 வயதுடைய இரு சிறுவர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் விண்ணரசன் வீட்டு சுவரில் பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் கவரை வீசி தீ வைத்தனர். போலீசார் சிறுவர்கள் உட்பட நால்வரை கைது செய்தனர்.


