தமிழகத்தில் வெப்ப தாக்கம்; வட மாநிலங்களுக்கு மழை
தமிழகத்தில் வெப்ப தாக்கம்; வட மாநிலங்களுக்கு மழை
தமிழகத்தில் வெப்ப தாக்கம்; வட மாநிலங்களுக்கு மழை
ADDED : ஜூன் 13, 2024 07:17 AM

சென்னை: 'வரும், 18ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்; தமிழக, ஆந்திர கடலோரம், சூறாவளி காற்று வீசும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன் செய்திக் குறிப்பு:
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதை தவிர, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், 1 முதல் 3 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும், 18ம் தேதி வரையிலும், ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில், கன மழைக்கு வாய்ப்பில்லை. சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோரம், வடக்கு அந்தமான் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும், 16ம் தேதி மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை, கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது.
அதனால் வரும் நாட்களில், வட மாநிலங்களில் பருவ மழை கொட்டும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.