Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'டிவி' ஒளிப்பதிவாளருக்கு அடி அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்

'டிவி' ஒளிப்பதிவாளருக்கு அடி அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்

'டிவி' ஒளிப்பதிவாளருக்கு அடி அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்

'டிவி' ஒளிப்பதிவாளருக்கு அடி அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்

ADDED : பிப் 29, 2024 11:46 PM


Google News
சென்னை:போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற, தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளர் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதற்கு, கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக், 2,000 கோடி ரூபாய் போதைப் பொருளை கடத்திய வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, தி.மு.க., மாவட்ட செயலர் சிற்றரசு அலுவலக கட்டடத்தின் கீழ் உள்ள, 'சஹாரா எக்ஸ்பிரஸ்' என்ற கூரியர் அலுவலகத்தில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதாக, தகவல் வெளியானது.

இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற, தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளர், தி.மு.க., குண்டர்களால் அறையில் கட்டி வைத்து, கொடூரமான முறையில் தாக்கப்பட்டுஉள்ளார். இச்சம்பவம் கண்டனத்துக்குரியது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தி.மு.க.,வுக்கு மடியில் கணமில்லை என்றால், எந்தவித சோதனை வந்தாலும், அதற்கான முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாறாக தி.மு.க.,வினர் கொலை வெறி தாக்குதல் நடத்துவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான தி.மு.க., பிரமுகர் சிற்றரசுக்கு சொந்தமான, 'சஹாரா கூரியர்' நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர்; அதை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் மீது, தி.மு.க., குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம் தான், ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வினியோக மையப் புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.,வின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை, தமிழக பா.ஜ., கண்டிக்கிறது.

ஸ்டாலின், முதல்வர் பொறுப்பு வகிப்பது, போதைப் பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தாக்குதல் நடத்திய, தி.மு.க.,வினரை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us