Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நீதிபதிகள் பயணித்த ரயிலை கவிழ்க்க சதி? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

நீதிபதிகள் பயணித்த ரயிலை கவிழ்க்க சதி? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

நீதிபதிகள் பயணித்த ரயிலை கவிழ்க்க சதி? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

நீதிபதிகள் பயணித்த ரயிலை கவிழ்க்க சதி? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

ADDED : ஜூன் 19, 2025 06:39 AM


Google News
சேலம் : ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நீதிபதிகள் பலர் பயணித்த நிலையில், அந்த ரயிலை, சேலம் அருகே, கவிழ்க்க சதி நடந்ததா என, டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சென்னை புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அன்று இரவு, 9:35 மணிக்கு, சேலம் அருகே காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்போது, தண்டவாளத்தில் தீப்பொறி பறந்தபடி, தட தடவென பெரிய அளவில் சத்தம் கேட்டது.

உஷாரான லோகோ பைலட், உடனே ரயிலை நிறுத்தி, இறங்கி பார்த்தார். அப்போது, தண்டவாள குறுக்குவாட்டில், 10 அடி நீள தண்டவாள கம்பி, ரயில் இன்ஜினில் சிக்கி, 800 மீட்டர் வரை இழுத்து வரப்பட்டதும், இன்ஜின் பழுதானதும் தெரிந்தது.

சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு கமிஷனர் சவுரகுமார், கோவை ரயில்வே டி.எஸ்.பி., பாபு, இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார், பிரியாசாய்ஸ்ரீ, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, விசாரித்தனர்.

இன்ஜினில் சிக்கிய தண்டவாள கம்பியை அப்புறப்படுத்திய பின், சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மாற்று இன்ஜினை பொருத்தி, இரவு, 11:45 மணிக்கு ரயில், சென்னை நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை, டி.எஸ்.பி., பாபு தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன், அந்த வழியே இரவு, 8:30 மணிக்கு, சரக்கு ரயில் சென்றது. அந்த ரயில் கடந்த பிறகே, தண்டவாளம் குறுக்கே இரும்பு சட்டம் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், கிருஷ்ணன், ராமசாமி, இளந்திரையன், கல்யாணசுந்தரம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சந்திரசேகரன் ஆகியோர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அதனால், நீதிபதிகள் சென்ற ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.

ரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார், கியூ பிரிவு போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். கைப்பற்றிய இரும்பு சட்டத்தில் பதிவான கைரேகைளை கொண்டும், அடையாளம் காணும் பணி நடக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் இரவு, 8:30 மணி முதல், 9:40 மணி வரை, இருந்த மொபைல் சிக்னல்களை வைத்தும், அ.தாழையூர், காளிகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us