Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தீயசக்தி தி.மு.க., 'துக்ளக்' விழாவில் அண்ணாமலை ஆவேசம் '

தீயசக்தி தி.மு.க., 'துக்ளக்' விழாவில் அண்ணாமலை ஆவேசம் '

தீயசக்தி தி.மு.க., 'துக்ளக்' விழாவில் அண்ணாமலை ஆவேசம் '

தீயசக்தி தி.மு.க., 'துக்ளக்' விழாவில் அண்ணாமலை ஆவேசம் '

UPDATED : ஜன 15, 2024 08:48 AMADDED : ஜன 15, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., என்ற தீயசக்தியை தோற்கடிக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

'துக்ளக்' பத்திரிகையின், 54வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விஞ்ஞான ஊழல்


விழாவில், அண்ணாமலை பேசியதாவது ; வரும் லோக்சபா தேர்தலில் ராஜிவ் மகன், ஷேக் அப்துல்லா மகன், கருணாநிதி மகன் என, வாரிசு அரசியலால் நிரம்பி இருக்கும் 'இண்டியா' கூட்டணி ஒரு பக்கம் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்காக, ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., என்றாலே ஊழல் என்று தான் அர்த்தம். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் கில்லாடிகள் அவர்கள். தி.மு.க.,வின் ஊழல்களுக்கு சர்க்காரியா கமிஷனிலேயே சான்றிதழ் கொடுத்துள்ளனர். சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், தி.மு.க.,வின் ஊழல்கள் புட்டு புட்டு வைக்கப்பட்டுள்ளன.

சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக இருக்க, அதில் இருந்து தப்பிக்க கணக்குப் போட்டார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அதற்காக, எதிராக இருந்த காங்கிரசோடு சரண்டர் ஆக முடிவெடுத்தார்.

உடனே, இந்திராவை வரவேற்று, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என கருணாநிதி அழைத்தார். இதெல்லாம் 1980ல் நடந்தது. அதன் பின்பே, காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அன்றைக்கு மரியாதையாக காங்கிரசை நடத்திய தி.மு.க., இன்றைக்கு கேவலமாக நடத்துக்கிறது. அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தேய்மானத்தில் இருப்பதுதான்.

காங்கிரஸ் கட்சியை எத்தனை மோசமாக தி.மு.க., நடத்தினாலும், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத அக்கட்சித் தலைவர்கள் தி.மு.க., பின்னால் செல்வதைத்தான் கவுரவமாக நினைக்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இப்போதைக்கு கொள்கைகள் எதுவும் கிடையாது. எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.

ஹிந்தி படித்து இருந்தால்


இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ஹிந்தியில் பேசினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியாது என்பதால், அதை மொழி பெயர்க்க வேண்டும் என, டி.ஆர்.பாலு, நிதீஷ் குமாரிடம் கேட்டார். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஹிந்தி கற்காமல் இருக்கிறீர்கள்.

முறையாக ஹிந்தி படித்து இருந்தால், இந்த பிரச்னையெல்லாம் கிடையாது என்று சொல்லி, கடைசி வரை ஹிந்தி மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை நிதீஷ்குமார். மொத்தத்தில் நிதீஷ்குமார் தி.மு.க.,வை மட்டுமல்ல, தமிழக மக்கள் பெரும்பான்மையாக ஓட்டு போட்டு தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலினையும் அவமானப்படுத்தி விட்டார். இதனால், அவமானப்பட்டது அவர் மட்டுமல்ல; தமிழக மக்களும் தான்.

இத்தனை அவமானத்துக்குப் பின்னும் தி.மு.க., இண்டியா கூட்டணியை தொங்கி பிடித்தபடி இருப்பதற்கு காரணம், தி.மு.க.,வின் இயலாமை. சமீபத்தில் தமிழகத்தில், தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடாக ஈர்க்கப்பட்டதாகச் சொல்கின்றனர். அதை உலக மகா சாதனையாகவும் பேசுகின்றனர்.

ஈர்க்கப்பட்டிருக்கும்


ஆனால், குஜராத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 26 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது.

உ.பி., மாநிலத்திலும் அதிக அளவில் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் தொழில் மூதலீடுகளில் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் பின் தங்கி தான் இருக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்தில், தேசிய அளவிளான தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதற்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தால், தமிழகத்திலும் கூடுதல் கோடிகளுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கும்.

தி.மு.க., பைல்ஸ்--3


தமிழகத்தில் தி.மு.க.,வின் அடாவடி ஆட்சி, குடும்ப ஆட்சி, நிர்வாக திறமையில்லாத ஆட்சி நடக்கிறது. இந்நிலை மாற வேண்டும். அதற்கு தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை பா.ஜ.,வால் மட்டுமே கொண்டு வர முடியும். தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதன் முழு அம்சமும் வெளியாகும்போது, தமிழக அரசியல் மட்டுமல்ல; தமிழக அரசே மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. கடினமான பாதையில் தமிழக பா.ஜ., தற்போது பயணித்தாலும், தமிழகத்துக்கு விரைவில் நல்லதொரு சூழல் பா.ஜ.,வால் அமையும்.

பா.ஜ.,வைப் பொருத்தவரை நேர்மையான, நாணயமான அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். தி.மு.க., அரசை அகற்றுவது மட்டுமல்ல, தமிழக அரசியலில் இருந்து தி.மு.க.,வையும் மாற்ற வேண்டும்.

அதுவரை தமிழக பா.ஜ., ஓயாமல் தன்னுடைய பணியை வேகமாக செய்யும். தி.மு.க., என்ற தீயசக்தியை, தேர்தல் வாயிலாக தோற்கடித்து, தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அது தான் எங்கள் ஒரே இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., சசிதரூரும் கலந்து கொண்டு பேசினார்.

Image 1219721

''துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

விழாவில், 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் நடக்கும் எல்லா அவலங்களையும், தவறுகளையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியே கொண்டு வராமல் கடந்து போகின்றன. ஆனால், 'தினமலர்' நாளிதழ் மட்டுமே ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி வெளிகொண்டு வருகிறது. அந்நாளிதழுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பா.ஜ., வளர்வதன் வாயிலாக, தி.மு.க.,வை எதிர்க்க முடியும். அக்கட்சியை எதிர்த்து வந்த அ.தி.மு.க., தற்போது அதை கைவிட்டு விட்டது. தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்பட்டு அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் தி.மு.க., தோற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us