தமிழக மக்கள் நன்மை பெறுவது ஸ்டாலினுக்கு தெரியாதா: பா.ஜ.,
தமிழக மக்கள் நன்மை பெறுவது ஸ்டாலினுக்கு தெரியாதா: பா.ஜ.,
தமிழக மக்கள் நன்மை பெறுவது ஸ்டாலினுக்கு தெரியாதா: பா.ஜ.,
ADDED : செப் 25, 2025 02:44 AM

சென்னை: சென்னை தி.நகர், பாண்டி பஜாரில் உள்ள கடைகளில், ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு பின் நடக்கும் வணிகம் தொடர்பான விபரங்களை, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நேற்று கேட்டறிந்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் எதையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்று பேசவில்லை. ரேஷனில் இலவச அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்குகிறது.
வீடு கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஜி.எஸ்.டி., கவுன்சிலில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் உள்ளனர்.
அவர்களின் ஒப்புதலுடன் ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள், 5, 12, 18, 28 சதவீதங்களில் இருந்தன. பிரதமர் மோடி, மக்களின் சுமையை குறைக்க, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைத்துள்ளார். இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது; மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.
இது, முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதா? தெரியவில்லை என்றால், தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது? இது மக்கள் விரோத திட்டமா என ஸ்டாலின் கூற வேண்டும்.
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 6ம் தேதி சென்னை வருகிறார்; பின், புதுச்சேரி செல்கிறார். தமிழக அரசு, மக்கள் விரோத அரசாக உள்ளது.
ஜி.எஸ்.டி., வரியை குறைத்தும், ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்படவில்லை. போராட்டம் அறிவித்த பின், விலையை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். ஆனாலும், முழுமையாக விலை குறைப்பு செய்யவில்லை.
இவ்வாறு கூறினார்.