Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ADDED : மார் 16, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிதி, கல்வியில் மாநிலத்தின் சுயசார்பை காப்பது அவசியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்திய அரசமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட, 75வது ஆண்டு விழா மற்றும், மெட்ராஸ் பார் அசோசியேஷனின், 160வது ஆண்டு விழா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை நடந்தது.

விழா மலரை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஒரு நீதிபதி ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தோம்; தமிழில் பேசினார். மற்றொரு நீதிபதி தமிழில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆங்கிலத்தில் பேசினார். இதுதான், இருமொழி கொள்கை; இது தான் தமிழகம். இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் உடையது, சென்னை உயர் நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும், முற்போக்கான சமூக வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதிலும் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் தான், சமூகத்தில் நிலவுகிற அநீதி என்ற நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவர்கள். ஜனநாயகத்தை செதுக்குவதில், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பங்களிப்பை பாராட்டுகிறேன்.

அரசமைப்பு சட்டம் என்பது சமூக நீதி, சமத்துவத்தை அடைக்கிற ஒரு கருவி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கையாக அங்கீகரிக்கும் ஒரு முறை என, டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்.

முக்கிய பங்கு


அரசமைப்பு ரீதியாக, இந்தியா ஒரு ஜனநாயக, சோசலிஷ, மதச்சார்பற்ற இறையாண்மை பொருந்திய குடியரசு.

இந்தியாவில் வெவ்வேறு மதம், இனம், பண்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், நம் அரசமைப்பு சட்டம், அதன் அணுகுமுறையால் உயிர்ப்புடன் உள்ளது.

அரசமைப்பு சட்டத்தின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக, உறுதியான துாண்களாக நிற்கும் சுதந்திரமான நீதித்துறை, சிறந்த நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பங்களிப்பு ஆகியவை, அரசமைப்பின் உயிர்ப்பான நிலைத்தன்மைக்கு காரணம்.

சமீப காலங்களில், அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒன்றான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிதி, கல்வி ஆகியவற்றில், மாநில அரசுகளின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. மாநில அரசுகளின் சுயசார்பு தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதில், நீதித் துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின், நீதித் துறை, வழக்கறிஞர்கள் நலன், சட்டக் கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்துக்கான மானியம், 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மண்ணின் ஆன்மா


புதிதாக 73 நீதிமன்றங்கள், 1,689 பணியிடங்கள் மற்றும் இதர வசதிகளை உருவாக்க, 150.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் குடியிருப்பு, பராமரித்தல், கணினி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு, 851.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை தொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர, தமிழக அரசு துணையாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருகை தந்துள்ள இந்நேரத்தில், மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வேண்டும். தென் மாநில மக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பயனடைவர்.

அரசமைப்பு சட்டம் என்பது, வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம் தானே என கருதக் கூடாது. அது நம் வாழ்க்கை பயணத்தில், நம் வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம். அது எப்போதுமே இந்த மண்ணின் ஆன்மாகவாக விளங்குகிறது என, அம்பேத்கர் சொன்னார். அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முக்கியத்துவம்


உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ''சட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் பல சட்டங்கள் மாற்றப்படலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய சட்டங்களை நாம் முனைப்போடு ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசுகையில், ''சமூக நீதியை நாம் கடைப்பிடிப்பதுடன், பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு உரிய முறையில் கற்றுத் தருவதுடன், தேவையான ஊதியத்தையும் வழங்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்களிடம் இருந்து இளம் வழக்கறிஞர்கள் கற்று கொள்ளும் வாய்ப்பை, மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்படுத்தி தர வேண்டும்,'' என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில்,. ''அரசியலமைப்பு என்பது ஒவ்வொரு நாளும் நம்மோடு ஒன்றிணைந்து பயணிக்க கூடியது. அதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்,'' என்றார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், ''அரசியலமைப்பு வந்து, 75 ஆண்டுகள் ஆகின்றன. அதன் முக்கியத்துவத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருக்க வேண்டும்,'' என்றார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.பராசரன், கே.கே.வேணுகோபால் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us