தலைமை செயலக கட்டுமான வழக்கு வாபஸ் பெற உரிமை என அரசு வாதம்
தலைமை செயலக கட்டுமான வழக்கு வாபஸ் பெற உரிமை என அரசு வாதம்
தலைமை செயலக கட்டுமான வழக்கு வாபஸ் பெற உரிமை என அரசு வாதம்
ADDED : பிப் 01, 2024 10:58 PM
சென்னை:புதிய தலைமை செயலக கட்டுமானம் தொடர்பான புகாரில், மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற, அரசுக்கு உரிமை உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதாடினார்.
தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டு மானத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்தும், அரசு உத்தரவிட்டது.
ரத்து
இதை எதிர்த்து, மறைந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின், துரைமுருகன் வழக்கு தொடர்ந்தனர். ஆவணங்களை, ஆதாரங்களை பரிசீலித்து, ஆரம்ப முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விரிவான விசாரணை நடத்த, முந்தைய அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கில், அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெற, இப்போதைய அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தன்னையும் சேர்க்க கோரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் மனுத் தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
கோர முடியாது
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற, அரசுக்கு உரிமை உள்ளது. அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் இவ்வழக்கில் இணைக்கும்படி மூன்றாம் நபர் கோர முடியாது,'' என்றார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''வழக்கு தொடுத்தவர், அதை வாபஸ் பெறுவதாக இருந்தால், எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது எனும் போது, மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும்.
''மனுதாரரின் தந்தையான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக, வாக்கி டாக்கி கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் உள்ளது,'' என்றார்.
கேள்வி
ஜெயவர்த்தன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''பொது நலன் தொடர்பான இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? தற்போது, எந்த காரணமும் கூறாமல் வாபஸ் பெற அரசு கோருவதால், இவ்வழக்கில் தன்னை இணைக்க கோருகிறார்,'' என்றார்.
இதையடுத்து, 'மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால், யாரிடம் அனுமதி பெற வேண்டும்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்களின் தொடர் வாதங்களுக்காக, விசாரணையை, வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


