Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ எஸ்.ஐ., பணிக்கான இறுதி  தேர்வு பட்டியல் சீருடை வாரியம் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

எஸ்.ஐ., பணிக்கான இறுதி  தேர்வு பட்டியல் சீருடை வாரியம் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

எஸ்.ஐ., பணிக்கான இறுதி  தேர்வு பட்டியல் சீருடை வாரியம் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

எஸ்.ஐ., பணிக்கான இறுதி  தேர்வு பட்டியல் சீருடை வாரியம் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

ADDED : அக் 09, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'தமிழகத்தில் காலியாக உள்ள, 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகள் பணிக்கான இறுதி தேர்வு பட்டியலை, ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும்' என, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் காலியாக உள்ள, 621 எஸ்.ஐ., 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கு, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்காலிக தேர்வு பட்டியல் எழுத்து, உடல் தகுதி மற்றும் நேர்முக தேர்வுகள் போன்ற நடைமுறைகள் முடிந்து, கடந்தாண்டு ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், 'இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை' என கூறி, தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் முகமது அஸ்லம் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தபோது, 'தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட புதிய தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, கடந்தாண்டு அக்., 3ல் திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை, வாரியம் வெளியிட்டது.

'முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள், இதில் இல்லை; மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விபரங்களும் இல்லாமல் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 100க்கும் மேற்பட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, கடந்தாண்டு அக்., 3ல் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, புதிய தேர்வுப் பட்டியல் தயாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமித்து உத்தரவிட்டார்.

உத்தரவு மேலும், புதிய தேர்வு பட்டியலை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் அதை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின்படி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலுடன் கூடிய அறிக்கையை, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் சமர்ப்பித்தார்.

'அந்த பட்டியலும் முறையாக இல்லை என்பதால், அந்த பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இந்த பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இட ஒதுக்கீடு நடைமுறை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற சட்டத்தை பின்பற்றி, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தேர்வு பட்டியலை தயாரித்துள்ளார்; அதில் எந்த விதி மீறலும் இல்லை.

சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அளித்த அறிக்கையின்படி, வாரியம் 30 நாட்களில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us