Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா சிறந்த முன்மாதிரி" - பிரதமர் மோடி ரஷ்யாவில் பெருமிதம்

"டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா சிறந்த முன்மாதிரி" - பிரதமர் மோடி ரஷ்யாவில் பெருமிதம்

"டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா சிறந்த முன்மாதிரி" - பிரதமர் மோடி ரஷ்யாவில் பெருமிதம்

"டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா சிறந்த முன்மாதிரி" - பிரதமர் மோடி ரஷ்யாவில் பெருமிதம்

UPDATED : ஜூலை 09, 2024 01:44 PMADDED : ஜூலை 09, 2024 12:16 PM


Google News
Latest Tamil News
மாஸ்கோ: ‛‛ எனது 3வது ஆட்சிக்காலத்தில் 3 மடங்கு வேகத்திலும், 3 மடங்கு அதிக பலத்துடனும் பணியாற்ற உறுதி ஏற்றுள்ளேன்'', என இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கோஷம்


ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது, ‛ மோடி... மோடி...' என அங்கிருந்தவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

பலத்துடன்


பிரதமர் மோடி பேசியதாவது: இங்கு வந்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி மக்களின் அன்பு மற்றும் இந்திய மண்ணின் நறுமணத்தையும் கொண்டு வந்துள்ளேன். 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல் முறையாக இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறேன். இன்றுடன் பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 3வது ஆட்சி காலத்தில் 3 மடங்கு வேகத்துடனும், 3 மடங்கு அதிக பலத்துடன் பணியாற்றுவேன் என உறுதி ஏற்றுள்ளேன்.

விருப்பம்


3வது ஆட்சி காலத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அதிகாரமளிக்க நாங்கள் விரும்புகிறோம்.

முன்மாதிரி


இன்று இந்தியா நிர்ணயித்த இலக்குகளை எட்டி வருகிறது. நிலாவில், உலக நாடுகள் செல்லாத பகுதிக்கு சந்திரயான் மூலம் இந்தியா சென்றுள்ளது. உலகளவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது. உலகில் 3வது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் அமைப்பு இந்தியாவில் உள்ளது. நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு 2014 ல் முதல்முறையாக வாய்ப்பு வழங்கிய போது, இந்தியாவில் 100க்கணக்கான ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்தது. இன்று லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் உள்ளன.

ஆதரவு


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன. உலகின் பல நாடுகளில் இருந்து வருபவர்கள், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம், மறு கட்டமைப்பை பார்க்கின்றனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம், சிலை ஆகியவற்றை அமைக்கும்போது, இந்தியா மாறுவதை பார்க்கும் உலக நாடுகள், 140 கோடி மக்களின் ஆதரவை நம்புவதால் இந்தியாவில் மாற்றம் ஏற்படுகிறது என சொல்கின்றன. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக பார்க்க வேண்டும் என 140 கோடி மக்கள் விரும்புகின்றனர்.

தன்னம்பிக்கை


இன்று இந்தியா தன்னம்பிக்கை உடன் உள்ளது. இது தான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. டி - 20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றியை நீங்களும் கொண்டாடி இருப்பீர்கள். இன்றைய இளைஞர்கள், கடைசி தருணம், நிமிடம் வரை தோல்வியை ஏற்றுக் கொள்வது இல்லை. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா வலிமையான வீரர்களை அனுப்பி வைத்து உள்ளது. இளைஞர்களின் தன்னம்பிக்கையே இந்தியாவின் உண்மையான தலைநகர். இந்த இளைஞர்கள், 21ம் நூற்றாண்டில் இந்தியாவை புது உச்சத்திற்கு கொண்டு செல்கின்றனர். சர்வதேச வறுமை முதல் பருவநிலை மாற்றம் வரை என ஒவ்வொரு சவாலான சூழ்நிலைகளை இந்தியா முன்னின்று எதிர் கொண்டு வருகிறது.

புடினுக்கு பாராட்டு


இந்தியா - ரஷ்யா உறவை பலப்படுத்துவதில் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்கு உண்டு.இரு நாட்டு உறவை சிறந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல ஓய்வின்றி உழைக்கும் அதிபர் புடினுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றை வலிமையான அடித்தளமாக கொண்டு இந்தியா ரஷ்யா உறவு கட்டமைக்கப்பட்டு உள்ளது. நல்ல மற்றும் கடினமான நேரத்தில் ரஷ்யாவை சிறந்த நண்பனாக ஒவ்வொரு இந்திய மக்களும் பார்க்கின்றனர்.

வர்த்தகம் எளிது


ரஷ்யாவில் கசான் மற்றும் யெகாடெரின்பர்க் ஆகிய நகரங்களில் தூதரக அலுவலகங்களை திறக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வர்த்தகம் எளிதாகும்.உலகத்தின் நன்மைக்கு இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று பணியாற்றி வருகிறது. இங்கு வந்துள்ளவர்கள் இரு நாட்டு உறவை புது உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளீர்கள். உங்களின் கடின உழைப்பு மூலம் ரஷ்ய சமூகத்திற்கு பங்களித்துள்ளீர்கள்.

இந்தியாவின் நூற்றாண்டு


21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என மொத்த நாடுகளும் நம்புகின்றன.வலிமையான தூணாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் திறன்களானது, உலகிற்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.இன்றைய உலகிற்கு நம்பிக்கை தேவை. ஆதிக்கம் தேவையில்லை. இதனை இந்தியாவைவிட வேறு யாரும் சிறப்பாக புரிந்து கொள்ளவில்லை. இந்தியா அமைதி, ஜனநாயகம் குறித்து பேசும்போது உலகம் உற்று கவனிக்கிறது. உலகம் பிரச்னை ஏற்படும் போது, அங்கு தீர்வு காண இந்தியா முதலில் அங்கு செல்கிறது.

சரக்கு போக்குவரத்து


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு தெற்கு போக்குவரத்து காரிடர் வழியாக முதல் வணிக கப்பல் இங்கு வந்தடைந்தது. தற்போது சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதித்து வருகிறோம்.

தன்னம்பிக்கை


இந்தியாவில், 60 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரே அரசை 3வது முறை தேர்வு செய்வது மிகப்பெரிய விஷயம். 4 மாநில சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.சவாலுக்கு சவால் விடுவது எனது டிஎன்ஏ.,வில் உள்ளது. வரும் ஆண்டுகளில் உலக வளர்ச்சியில் இந்தியா புது அத்தியாயத்தை எழுதும். கடந்த 10 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி என்பது டிரைலர்தான். வரும் ஆண்டுகளில் அதிகமான வளர்ச்சியை பார்க்க உள்ளோம். 2014க்கு முன்பு போல் இல்லாமல், இன்று இந்தியா தன்னம்பிக்கையுடன் உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us