இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாக புகார்
இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாக புகார்
UPDATED : ஏப் 07, 2026 04:01 PM
ADDED : ஏப் 07, 2026 03:56 PM

சேலம்: சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் காசி களமிறக்கப்பட்டுள்ளார். இதனைத் தவிர்த்து இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக விஜய், இந்தத் தொகுதியில் அருண்குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். இடைப்பாடி தொகுதியில் 36 பேர் களமிறங்கினர்.
இந்த தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று நடந்தது. இதில், தவெகவின் அருண்குமார் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து அவரை எங்கும் காணாததால், அவர் கடத்தப்பட்டு விட்டதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வேட்புமனு பரிசீலனை நடக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
