Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை

ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை

ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை

ரசிகர்களை ஏமாற்றும் ஐ.பி.எல்., சூதாட்டம்; மோசடி மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை

Latest Tamil News
சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் (TNOGA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பலவகையிலும் மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மொபைல் செயலிகளில் இணையவழி சூதாட்டம் தொடர்ந்து நடக்கிறது. இதில் ரசிகர்களின் ஆர்வம் தூண்டப்படுவதால், ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் போன்று சித்தரித்து விளம்பரம் செய்து, பொதுமக்களை சூதாட ஈர்க்கின்றனர்.பங்கு வர்த்தகத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளையே இதற்கும் பயன்படுத்துகின்றனர்.

இதனால், சூதாட்டம் என்பதை அறியாமல் பலரும் இதில் சிக்கி ஏமாந்து பணம் நஷ்டம் அடைகின்றனர். இது பற்றி ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி கிரிக்கெட் ரசிகர்களை நூதானமாக ஏமாற்றி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அந்த வகையில் தமிழகத்தில் பல வெப்சைட்டுகள் மற்றும் ஆன்லைன் கேமிங் செயலிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் சில செயலிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தது அம்பலமானது. அத்தகைய 15 ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் (TNOGA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து தற்போது, இரண்டு ஆன்லைன் கேமிங் செயலிகள் தமிழகத்தில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தின. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர்ந்து ஆன்லைன் கேமிங் செயலிகள் ரசிகர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். நாங்கள் ஆன்லைன் கேமிங் செயலியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

நாங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ள ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் சரியான விளக்கத்தை அளிக்க தவறினால் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மோசடி நடப்பது தொடர்ந்தால், ஜியோ பென்சிங் மூலம் அந்த செயலிகள் தமிழகத்தில் செயல்பட முடியாத வகையில் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us