Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே: ஐகோர்ட்டில் ஐ.டி., தகவல்

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே: ஐகோர்ட்டில் ஐ.டி., தகவல்

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே: ஐகோர்ட்டில் ஐ.டி., தகவல்

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே: ஐகோர்ட்டில் ஐ.டி., தகவல்

UPDATED : செப் 23, 2025 10:25 PMADDED : செப் 23, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'கூடுதல் வருமானம் 15 கோடி ரூபாயை மறைத்ததற்காக, 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி, நடிகர் விஜய்க்கு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியே' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த, 2016 -17ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில், ஆண்டு வருமானமாக, 35 கோடி, 42 லட்சத்து, 91,890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில், 2015ல் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.

அதன்படி, 'புலி' படத்துக்கு பெற்ற, 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. இதையடுத்து, வருமானத்தை மறைத்ததற்கு, 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 2022, ஜூன் 30ம் தேதி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், விஜய் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அபராதம் விதித்து, 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்' என, விஜய் தரப்பில் வாதாடப்பட்டது.

வருமான வரித் துறை சார்பில் வழக்கறிஞர் சீனிவாஸ் ஆஜராகி, ''வருமான வரி சட்டப்படி, விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். அதனால், அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து நீதிபதி, இதேபோன்ற ஒரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய, விஜய் தரப்புக்கு உத்தரவிட்டார். விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us