மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி ஒப்புதல் கேட்டு மோடிக்கு கடிதம்
மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி ஒப்புதல் கேட்டு மோடிக்கு கடிதம்
மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி ஒப்புதல் கேட்டு மோடிக்கு கடிதம்
ADDED : பிப் 10, 2024 11:55 PM
சென்னை:'சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, மத்திய அரசு விரைவாக ஒப்பு தல் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சம பங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.
அடிக்கல்
அடுத்து, 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கி.மீ., நீளமுள்ள மூன்று வழித்தடங்களை கொண்ட, இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
கடந்த 2019 ஜனவரி மாதம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த அமைச்சகம் மற்றும் 'நிடி ஆயோக்' ஆகிய வற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர், 2020 நவ., 21ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், இத்திட்டத்தின் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
பிரதமருடனான பல்வேறு சந்திப்புகளின் போது, இது தொடர்பாக வலியுறுத்தினேன்; எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த திட்டத்திற்கான முன்மொழிவு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறது.
செலவினங்கள்
மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள், இத்திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வசதியாக, இரண்டாம் கட்டப் பணிகளை, தமிழக அரசு துவக்கி உள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களின் கனவு
இது பணிகளின் வேகத்தை குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அப்போது தான் சென்னை மக்களின் கனவு திட்டத்தை, குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும்.
எனவே, பிரதமர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.