ஜி.எஸ்.டி., குறைப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஜி.எஸ்.டி., குறைப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஜி.எஸ்.டி., குறைப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 26, 2025 01:34 AM
சென்னை:தமிழகத்தில் ஜி.எஸ்.டி., குறைப்பின் பயன்கள், மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, வணிக வரித்துறை அதிகாரிகள், கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள, 11 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு, மக்களின் சுமையை குறைக்க, ஜி.எஸ்.டி., விகிதங்களை மறுசீரமைத்துள்ளது.
இதனால், பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறைக்கப்பட்ட வரி விகிதங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி, புதிய விலைகளில் பொருட்களை விற்குமாறு, தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள வணிகர்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
எனவே, தமிழகத்தில் ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்கள், மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தொழில் மற்றும் வணிக கடை களில், வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., குறைப்பு அமலுக்கு வந்தாலும், சில கடைகளில் புதிய விலைகளில் பொருட்கள் விற்பதில்லை என தகவல்கள் வருகின்றன. வணிகர்கள் தங்களிடம் ஏற்கனவே பொருட்களை இருப்பு வைத்திருந்ததால், அவற்றை ஜி.எஸ்.டி., குறைப்பின் கீழ், புதிய விலையில் விற்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, அதிகாரிகள் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைப்பதை, உறுதி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.