ADDED : ஜன 23, 2024 09:48 PM

ஜனவரி 24, 2015
செங்கல்பட்டு மாவட்டம், வெம்பாக்கம் என்ற கிராமத்தில், 1925, பிப்ரவரி 24ல் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். இவர், சென்னை பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, கிறிஸ்துவ கல்லுாரிகளில் படித்தார். துமிலனின், 'மாலதி' என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
'நகையே உனக்கு நமஸ்காரம்' என்ற நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார். இவர் அப்பாவாக நடித்த 'வைரமாலை' நாடகம், திரைப்படமானபோது, அதிலும் அதே பாத்திரத்தில் நடித்தார். மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து, 'இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்' என்ற நாடக கம்பெனியை துவங்கி, நாடகங்களை நடத்தினார்.
'சங்கே முழங்கு, உரிமைக் குரல், வசந்த மாளிகை, காதலிக்க நேரமில்லை, உன்னால் முடியும் தம்பி' ஆகிய திரைப்படங்களில், ஐந்து தலைமுறை நடிகர்களுடன் வில்லன், அப்பாவாக நடித்தார். 'ரேகா ஐ.பி.எஸ்., பைரவி, வள்ளி' உள்ளிட்ட, 'டிவி' தொடர்களிலும் நடித்த இவர், 2015ல், தன், 90வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
மேடை, வானொலி, திரை, சின்னத்திரைகளில், 50 ஆண்டுகள் கோலோச்சிய வி.எஸ்.ராகவன் மறைந்த தினம் இன்று!


