ADDED : மே 02, 2026 04:01 AM

சென்னை: ஐ.ஆர்.சி.டி.சி.,யில் 'தத்கால்' முன்பதிவின் போது பல முறை முயற்சித்தும், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி.,யில் முன்பதிவு செய்கின்றனர். கடந்த சில நாட்களாக, தத்கால் முன்பதிவின்போது அடிக்கடி 'சர்வர்' பிரச்னை ஏற்படுகிறது.
டிக்கெட் முன்பதிவின்போது அடிக்கடி தோல்வியில் முடிகிறது; பல முறை முயற்சிக்கும் நேரத்தில், டிக்கெட்டுகள் காலியாகி விடுகின்றன.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், தத்கால் முன்பதிவின்போது அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது.
இது தவிர, முன்பதிவின்போது உள்ளே சென்று அனைத்து விபரங்களையும் அளித்து, கட்டணம் செலுத்திய பின்னும், டிக்கெட் உறுதியாவதில்லை. 'டிக்கெட் புக்கிங் பெயிலியர்' என காட்டுகிறது. கட்டணத்துக்கான பணமும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுபோல் பல முறை முயற்சித்தாலும், டிக்கெட் உறுதியாவதில்லை.
இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். நீண்ட துார பயணத்துக்கு, ரயிலை நம்பியே இருக்கும் எங்களை போன்ற பயணியரின் நிலை திண்டாட்டமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
