வதந்தி பரப்பினால் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை
வதந்தி பரப்பினால் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை
வதந்தி பரப்பினால் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை
ADDED : செப் 23, 2025 10:11 PM
சென்னை:'பொள்ளாச்சி மற்றும் சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது போல, கன்னியாகுமரியில் பாலியல் வன்முறை சம்பவம் நடந்திருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவரது ஆண் நண்பர், தன் தாயின் பிறந்த நாளையொட்டி, கேரள மாநிலம் பொழியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தன் நண்பரை வரவழைத்து, அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது, அந்த பெண்ணை காப்பாற்றுவது போல, அங்கு இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள், பெண்ணின் ஆண் நண்பர் உள்ளிட்ட இருவரையும் தாக்கி விரட்டி விட்டு, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
அதை வீடியோ எடுத்து மிரட்டியும் உள்ளனர். இச்சம்பவம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் போல நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து வருவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இச்சம்பவம், 2023ல், கேரள மாநிலம் பொழியூர் கடற்கரையில் நடந்துள்ளது. அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தற்போது, இச்சம்பவத்தை மையமாக வைத்து, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என வதந்தி பரப்பப்படுகிறது.
இதுபோன்ற பொய்யான செய்தியை வெளியிடுவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.