Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாணவி கோரிக்கையை ஏற்று புதிய வீடுக்கு முதல்வர் உத்தரவு

மாணவி கோரிக்கையை ஏற்று புதிய வீடுக்கு முதல்வர் உத்தரவு

மாணவி கோரிக்கையை ஏற்று புதிய வீடுக்கு முதல்வர் உத்தரவு

மாணவி கோரிக்கையை ஏற்று புதிய வீடுக்கு முதல்வர் உத்தரவு

ADDED : செப் 27, 2025 02:17 AM


Google News
சென்னை:'நான் முதல்வன்' திட்டத்தில் படித்து சாதித்த மாணவியின் ஏழ்மை நிலை அறிந்து, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், அவருக்கு வீடு கட்டி கொடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற தென்காசியைச் சேர்ந்த பிரேமா பேசினார்.

அப்போது, தான் கல்லுாரி விடுதியில் தங்கி படித்ததாகவும், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து அவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டி கொடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவிற்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி, உங்களை படிக்க வைத்த தந்தையிடம் முதல் மாத சம்பளத்தை தந்து, நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்கு, புதிய வீடு கட்டி கொடுப்பதற்கான ஆணையை வழங்கி, நான் மகிழ்ச்சி கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

'ரூ.1000 போதாது' புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் பயனடைந்த மாணவர்கள் மேடையில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, தென்காசி மாவட்டத்தை சேர்ந்தமாணவர்தங்க சொக்கலிங்கம் பேசுகையில், 'தமிழ் புதல்வன் திட்டம், எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. கல்லுாரி கட்டணம், வீட்டு செலவுக்கு, இந்த தொகையை பயன்படுத்திக் கொள்வேன். 1000 ரூபாய் எனக்கு போதாது. அதனால், காலையில் எழுந்து, வீடுகளுக்கு பேப்பர் போடுகிறேன்; மாலையில் பகுதி நேரமாக பணியாற்றுகிறேன். அதனால், 1000 ரூபாய் என்பதை உயர்த்தி கொடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

ராணிப்பேட்டை மாணவி சுப்புலட்சுமி பேசுகையில், 'இளநிலை பட்ட மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்குவதை போல, முதுநிலை பட்டம் படிக்கும் மாணவியருக்கும் வழங்க வேண்டும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us