Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்ற செயலாக கருத முடியாது: ஐகோர்ட்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்ற செயலாக கருத முடியாது: ஐகோர்ட்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்ற செயலாக கருத முடியாது: ஐகோர்ட்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்ற செயலாக கருத முடியாது: ஐகோர்ட்

ADDED : ஜூன் 17, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை, குற்ற செயலாக கருத முடியாது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, 2016ம் ஆண்டு மே மாதம், மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'உள்ளூர் பகுதி மக்களின் நலன் கருதி போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.

'மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காத நிலையில், யாரும் புகார் கொடுக்காத நிலையில், போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறாமல் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபானக் கடைகள் ஏற்படுத்தும் சமூக பிரச்னை குறித்து, பொது மக்கள் அமைதியாக நடத்தும் போராட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது.

ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரங்களின்போது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக, வாக்குறுதிகளை அளித்தாலும், உண்மையில் கடைகளை மூடுவதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றுவதால் முக்கிய பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.

இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக, காவல்துறை குற்றவியல் வழக்குகளை பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும்.

அமைதியான போராட்டம், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டது. போராட்டங்கள் அமைதியாகவும், வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொது மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், அரசிடமிருந்து உரிமைகளை கேட்கவும் முடியும். எனவே, சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us