Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

UPDATED : ஜூன் 18, 2025 03:15 PMADDED : ஜூன் 16, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
சென்னை:ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும், 15,000 கோடி ரூபாய் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாநில நிதி நிலைமை சரியில்லை என நிதித்துறை கைவிரித்ததால், தமிழக நீர்வளத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி.,யாக உள்ளது. விரிவாக்க பகுதிகளின் பரப்பளவு அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை 2030ம் ஆண்டிற்குள், 1.50 டி.எம்.சி.,யாக அதிகரிக்கும் என, சென்னை குடிநீர் வாரியம் கணக்கிட்டுள்ளது.

இதற்காக, புதிய நீராதாரங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கம், செங்கல்பட்டு மாவட்டம், கொளவாய் ஏரி கொள்ளளவு உயர்த்தும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, சோழவரம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவமழை வாயிலாக நீராதாரம் கிடைத்து வருகிறது. பூண்டி ஏரிக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்தும் நீர்வரத்து கிடைக்கிறது. இதற்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் படி, ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறக்கவேண்டும்.

இதில் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.,யும் வழங்கப்பட வேண்டும். இந்த நீரை கொண்டு வர ஆந்திராவில், 152 கி.மீ., துாரத்திற்கும், தமிழகத்தில், 25 கி.மீ., துாரத்திற்கும் கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கால்வாயின் இரண்டு புறங்களிலும் விவசாயம் நடந்து வருகிறது. ஆந்திர விவசாயிகள் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்காக, கால்வாயில் இருந்து மோட்டார் போட்டு நீரை எடுத்து கொள்கின்றனர். இதற்கு, அம்மாநில நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், தமிழகத்தில், நீர் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியில்லை. ஆந்திர விவசாயிகள் அதிகளவில் நீரை எடுப்பதால், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை. மேலும், கோடை காலங்களில் நீர் அதிகம் ஆவியாகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கண்டலேறு அணையில் இருந்து புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ராட்சத குழாய் வாயிலாக தண்ணீரை நேரடியாக கொண்டுவர நீர்வளத்துறையால் திட்டமிடப்பட்டது.

இதற்கு, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மாநில அரசிடம் இதற்கான நிதி கோரப்பட்டது.

ஆனால், இதுவரை நிதித்துறை நிதி வழங்கவில்லை. இதனால், திட்டத்தை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


இந்த திட்டத்தை செயல்படுத்தினால், 12 டி.எம்.சி., நீரில் ஒரு சொட்டு கூட வீணாகாமல் கொண்டு வர முடியும். ஆனால், மாநில அரசின் நிதி நிலைமை சரியில்லை எனக்கூறி, இந்த திட்டத்திற்கு நிதி வழங்க நிதித்துறை மறுத்துவிட்டது.

உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடம் கடனுதவி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கேட்கப்பட்டது. இதனால், மாநில அரசின் கடன் சுமை அதிகரிக்கும் என, நிதித்துறை கைவிரித்துவிட்டது. பிற்காலங்களில் நிலைமை சரியானால், நிதி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, குழாய் வழியாக கிருஷ்ணா நீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us