Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'வந்தே மாதரம்' நிகழ்ச்சிகள்

 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'வந்தே மாதரம்' நிகழ்ச்சிகள்

 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'வந்தே மாதரம்' நிகழ்ச்சிகள்

 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'வந்தே மாதரம்' நிகழ்ச்சிகள்

ADDED : டிச 03, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
சென்னை : மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அடுத்தாண்டு நவ., வரை, வந்தே மாதரம் பாடல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் கல்விசார் இயக்குநர் பிரக்யா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், 150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட, 'வந்தே மாதரம்' பாடலை, மாணவர்கள் மத்தியில் நினைவுக்கூரும் வகையில், அடுத்தாண்டு நவ., 7ம் தேதி வரை, காலை வழிபாட்டு கூட்டங்களில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டது குறித்த அறிமுகம், அதன் பொருள் குறித்து, ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அதுகுறித்த கேள்வி - பதில், வினாடி - வினா நிகழ்ச்சிகள், வரலாற்று தகவல்கள், ஓவியங்கள், போஸ்டர்கள் வரைதல், தேச ஒற்றுமை சார்ந்த கலை போட்டிகள், பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்த வேண்டும்.

அதன் பதிவுகளை, https://www.mygov.in என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும், அடுத்த சுதந்திர தினத்தில், வந்தே மாதரம் பாடலை, பேண்டு வாத்தியக் கருவிகளின் வாயிலாக மாணவர்கள் இசைக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

சுதந்திர போராட்ட வரலாறு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தோர் வரலாறுகளை நாடகமாகவும் நடத்த வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us