ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு
ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு
ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு
ADDED : மே 31, 2025 07:32 AM
சென்னை: ராஜ்யசபா சீட் தொடர்பாக, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது. அப்போது, ராஜ்யசபா சீட் தர, அ.தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளதாக, தே.மு.தி.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு உறுதி எதுவும் அளிக்கப்படவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், ஜூன் 19ம் தேதி, ராஜ்யசபா எம்.பி.,யாக ஆறு பேரை தேர்வு செய்ய, தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் நான்கு இடங்களுக்கு, தி.மு.க., கட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில், அ.தி.மு.க, கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், அக்கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
தே.மு.தி,க.,வுக்கு ஒரு சீட் வழங்குவது, அ.தி.மு.க,வின் கடமை என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தே.மு.தி.க, பொருளாளர் சுதீஷ், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பை வழங்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.