முட்டை பற்றாக்குறையால் விழிபிதுங்கும் அமெரிக்கா
முட்டை பற்றாக்குறையால் விழிபிதுங்கும் அமெரிக்கா
முட்டை பற்றாக்குறையால் விழிபிதுங்கும் அமெரிக்கா

வாஷிங்டன் : முட்டை பற்றாக்குறையால் அமெரிக்கவாசிகள் விழிபிதுங்கியுள்ளனர் .
கனடா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரி விதிப்பை அறிவித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப். அது இப்போது பூமராங் ஆகி, அமெரிக்காவை பதம் பார்க்கத் துவங்கியிருக்கிறது.
அமெரிக்காவில், டிரம்ப் அதிபரானதும் தற்செயலாக, பறவைக்காய்ச்சல் அதிகரித்து 16.60 கோடி கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன.
மேலும், நோய்வாய்ப்படும் கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அந்நாட்டில், முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விலை பல மடங்கு
உயர்ந்திருக்கிறது.
கடந்த ஜனவரியில், இரண்டரை டாலருக்கு கிடைத்த ஒரு டஜன் முட்டையின் விலை தற்போது 8.50 டாலராகி இருக்கிறது அதாவது இந்திய ரூபாயில், கிட்டத்தட்ட 800 ரூபாய், அதாவது ஒரு முட்டை விலை 66 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
முட்டை பற்றாக்குறை காரணமாக, அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில், வாடிக்கையாளர்கள் வாங்கும் முட்டை எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஹோட்டல்கள், விடுதிகளில் முட்டை இடம்பெறக்கூடிய உணவு ரகங்கள் இல்லை என கைவிரிக்கப்படுகிறது.
இதனால், ஆம்லெட் பிரியர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் அள்ளித் தெளிக்கின்றனர். ஆனால், தன் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், முட்டை விலை பற்றி மக்கள் வாய்திறக்க கூடாது என்றார்.
இது, மக்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, 10 கோடி முட்டைகளை உடனடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்தது. கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க இயலுமா என கேட்டுள்ளனர்.
ஆனால், தங்கள் பொருட்களுக்கு அண்மையில், 25 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி வரி விதித்த அமெரிக்காவை பழிவாங்க இதுவே சரியான நேரம் என கருதும் கனடா, ஐரோப்பிய நாடுகள், முட்டை ஏற்றுமதிக்கு சம்மதிக்கவில்லை.
தங்கள் நாட்டின் தேவை மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஏற்றுமதி ஒப்பந்தங்களை அவை காரணம் காட்டுகின்றன.
உதவிக்கரம்
முட்டைகளை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பின்லாந்து நிராகரித்து விட்டது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் அமெரிக்கர்கள், 'எல்லா நாடுகளையும் வரிவிதிப்பு என பயமுறுத்திய டிரம்ப் அரசு, மற்ற நாடுகளை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது' என்பதை முட்டை விவகாரம் உணர்த்தி விட்டது என கூறியுள்ளனர்.
'