Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 'ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்'

'ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்'

'ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்'

'ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்'

ADDED : செப் 23, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
ஜெருசலேம்:'ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்' என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசிய நாடான இ ஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், இரண்டாண்டுகளை எட்டியுள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக பேசப்படும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது என்ற கோஷம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. இதில், இது குறித்து முக்கிய விவாதம் நடந்து வருகிறது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளும், ஹமாஸ் தலையீடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் அதிகார சபையின் அதிபரான மஹ்மூத் அப்பாஸ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம்.

இதுவரை இவ்வாறு செய்யாதவர்கள், இதை பின்பற்றுமாறு நாங்கள் அழைக்கிறோம். பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான உறுப்பினராவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் கோருகிறோம்.

எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது.

ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை தற்போதைய பாலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் இல்லாத ஒரே சட்டத்தின் கீழ், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்புப் படையைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அரசு.

கடந்த 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும், பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

போர் முடிவுக்கு வந்த பின், அதிபர் பதவி மற்றும் பார்லிமென்டுக்கு தேர்தல்கள் நடத்தப்படும்.

தற்போது அதிகார சபையிடம் உள்ள அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் ஒரு இடைக்கால அரசியலமைப்பு வரைவை அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா.,வின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தாலும், ஐ.நா.,வில் புதிய உறுப்பு நாடாக இணைய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஆதரவைப் பெற வேண்டும். ஆனால், அமெரிக்கா தனக்குள்ள, 'வீட்டோ' எனப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை தடுக்கும்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இத்தாலியில் போராட்டம்!


பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மறுத்த இத்தாலி அரசைக் கண்டித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இம்மாத துவக்கத்தில் ஐ.நா.,வில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடான இத்தாலி ஓட்டளித்தது. ஆனால், தற்போதைக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கப் போவதில்லை என, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, இத்தாலி பிரதமர் மெலோனிக்கு எதிராக, அந்த நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மிலன், ரோம், போலோக்னா மற்றும் நாபிள்ஸ் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி போராடினர். சில இடங்களில் வன்முறை வெடித்தது. மிலனில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 போலீசார் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us