Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்

இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்

இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்

இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்

ADDED : மார் 16, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாணவியின் விசாவை, அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாணவி தானாகவே அமெரிக்காவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன், அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள கொலம்பியா பல்கலையில் நகர்ப்புற திட்டமிடல் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார்.

குற்றச்சாட்டு


மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது.

இதில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ரஞ்சனி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த 'எப்1' எனப்படும் மாணவர்களுக்கான விசாவை ரத்து செய்ய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.

இதன்படி, அமெரிக்க வெளியுறவுத் துறை அவருக்கான விசாவை கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில், மாணவி ரஞ்சனி அமெரிக்காவில் இருந்து கடந்த 11ம் தேதி தானாகவே வெளியேறியுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ளவர்கள் தாங்களாகவே வெளியேறுவதற்காக, புதிய மொபைல் போன் செயலி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியில் பதிவிட்டு, ரஞ்சனி வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்டி நியோம் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்காக வழங்கப்படும் விசா என்பது சிறப்பு சலுகை. இதை தவறாகப் பயன்படுத்தினால், அந்தச் சலுகை பறிக்கப்படும்.

போராட்டம்

மொபைல் போன் செயலியில் பதிவிட்டு தாங்களாகவே வெளியேறினால், சட்டப்பூர்வமாக மீண்டும் அமெரிக்காவிற்கு வர வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் நாங்களாகவே வெளியேற்றினால், எதிர்காலத்தில் எந்த வகையிலும் அமெரிக்காவிற்கு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலம்பியா பல்கலையில் மாணவர்களுக்கு இடையே இன ரீதியிலான பிளவுகள் அதிகளவில் இருப்பதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன.

குறிப்பாக, இஸ்ரேலின் யூதர்களுக்கு எதிரான கொள்கை உள்ளவர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அந்த பல்கலைக்கான நிதியை நிறுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

யார் இந்த ரஞ்சனி?


இந்தியாவைச் சேர்ந்த மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், குஜராத்தின் ஆமதாபாத் பல்கலையின், சி.இ.பி.டி., எனப்படும் சுற்றுச்சூழலியல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இளநிலை பட்டப் படிப்பை படித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுநிலை படிப்பை முடித்துள்ளார். இதற்காக கல்வி உதவித்தொகையும் அவருக்கு கிடைத்துள்ளது.

தற்போது கொலம்பியா பல்கலையின் கட்டடக் கலை, திட்டமிடல் மற்றும் பராமரிப்பு பள்ளியில், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். இந்தியாவின் சிறு நகரங்களில், நிலம் மற்றும் தொழிலாளர் இடையேயான தொடர்பு குறித்து அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். நகர்ப்புற திட்டமிடல், வளர்ச்சிகளில்

அரசியல் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் தீவிர ஆர்வம் உள்ளவர்.

கொலம்பியா பல்கலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, வன்முறை

மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, அவருடைய விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us