'மோடியை சொந்த தாத்தாவாக என் குழந்தைகள் பார்த்தனர்' அமெரிக்க துணை அதிபர் மனைவி உருக்கம்
'மோடியை சொந்த தாத்தாவாக என் குழந்தைகள் பார்த்தனர்' அமெரிக்க துணை அதிபர் மனைவி உருக்கம்
'மோடியை சொந்த தாத்தாவாக என் குழந்தைகள் பார்த்தனர்' அமெரிக்க துணை அதிபர் மனைவி உருக்கம்
ADDED : ஜூன் 04, 2025 12:36 AM

வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த ஏப்ரலில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்திய வம்சாவளியான அவரது மனைவி உஷா வான்ஸ், மகன்கள் ஈவான், 8, விவேக், 5, மகள் மீராபெல், 4, ஆகியோரும் வந்திருந்தனர்.
டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு வான்ஸ் தம்பதியின் குழந்தைகள், பிரதமருடன் நேரத்தை செலவிட்டனர். இதையடுத்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
இந்த பயண அனுபவம் குறித்து, அமெரிக்கா -- இந்தியா ஒத்துழைப்பு மன்றத்தில் நேற்று நடந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் மனைவி உஷா வான்ஸ் கூறியதாவது:
எங்களின் இந்திய பயணம் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பிரதமர் மோடியை பார்த்தவுடன் என் பிள்ளைகள், அவரை சொந்த தாத்தா ஸ்தானத்தில் வைத்து விட்டனர். ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்துக் கொண்டனர். அவரும் குழந்தைகள் மீது பாசத்தை காட்டினார்.
இதற்கு முன் என் குழந்தைகள் இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால், இந்தியாவை பற்றி நிறைய கதைகளை கேட்டுள்ளனர். அதை நேரில் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்திய உணவு, விலங்குகள், கோவில் சிற்பங்கள், ஆட்டோ பயணம் என அனைத்தையும் ரசித்தனர்.
உலக முழுக்க அவர்கள் பயணித்திருந்தாலும், எப்போதும் இந்திய பயணத்தை பற்றியே பேசுகின்றனர். அடுத்து, என் பூர்விகமான ஆந்திராவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.