உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு... 2 மணி நேர பயணம் 2 நிமிடமானது!
நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கிலுள்ள குய்ஷோ மாகாணத்தில் 'ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.
இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டி முடிக்க மூன்றாண்டுகளுக்கு மேலானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, மிக உயரமான பாலம் என, பெயர் பெற்ற அப்பகுதியிலுள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் முந்தியுள்ளது.
இதனால், இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடங்களாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆயிரக்கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான மாகாணமான குய்ஷோ, இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களை கொண்டு பெருமையடைகிறது.
உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி, சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.