ADDED : ஏப் 17, 2026 04:55 AM

- நமது நிருபர் -
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மைசூரில் விரைவில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மைசூரு மாநகராட்சி செய்து வருகிறது.
மைசூரில் ஏற்கனவே ஒரு விளையாட்டு அரங்கம் உள்ளது. ஆனாலும், இந்த மாவட்டத்தில் மல்யுத்தம், கபடி உட்பட, பல்வேறு விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், அவர்கள் பயிற்சி பெற, மற்றொரு விளையாட்டு அரங்கம் கட்ட, மைசூரு மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரின் ஜெயதேவா மருத்துவமனை பின்பகுதியில், கும்பார கொப்பலுவில் உள்ள, 2.25 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 4.95 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்டப்படும். மாநகராட்சியே இதற்கான செலவை ஏற்று பணிகளை மேற்கொள்ளும்.
புதிய விளையாட்டு அரங்கில், ஒரு கபடி விளையாட்டு அரங்கம், இரண்டு பேட்மின்டன் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் குறித்து மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் அனுமதி பெறப்படும்.
அதன்பின் டெண்டர் விடுக்கப்பட்டு, ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் கட்டுமான பணி துவங்கும். அத்துடன், எட்டு மாதங்களில், விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்படும். இது, விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.
மைசூரின் பழைய பகுதியான கும்பார கொப்பலு, ஆரம்பத்தில் இருந்தே மல்யுத்த விளையாட்டுக்கு பெயர் பெற்றதாகும்.
இங்கு சில இடங்களில், பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கிருந்து பல விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளனர். தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை செய்துள்ளனர். இன்றைக்கும் சிறப்பு நாட்களில், மாநில, தேசிய அளவிலான மல்யுத்த போட்டிகள் நடக்கின்றன.
இத்தகைய பகுதியில் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்டப்படுவதால், விளையாட்டு போட்டிகள் நடத்த உதவியாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும் முடியும். இன்னும் எட்டு மாதங்களில் புதிய விளையாட்டு அரங்கம் தயாராகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.





