ADDED : ஏப் 24, 2026 04:05 AM

- நமது நிருபர் -
டி.நரசிபுரா தாலுகாவின், பைராபுரா கிராமத்தில் உள்ள பட்டுத்துறை தொழிற்சாலை வளாகத்தில், விளையாட்டு அரங்கம் கட்டும் உத்தரவை அரசு திரும்ப பெற்றது.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின் பைராபுரா கிராமத்தில் பட்டுத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஹைடெக் விளையாட்டு அரங்கம் கட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வெளியானது.
பட்டுத்துறை தொழிற்சாலை வளாகத்தில், அபூர்வமான அரியவகை மரங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன. இயற்கையான சூழ்நிலை உள்ளது.
இத்தகைய இடத்தில் விளையாட்டு அரங்கம் அமைத்தால், 500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டியிருக்கும். இங்கு வசிக்கும் பறவைகள், விலங்குகள், உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
தொழிற்சாலையின் மொத்த பரப்பளவு, 12.5 ஏக்கர் பரப்பளவில், 33 சதவீதம் பகுதியை மரங்கள், செடிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இதுபோன்ற இடத்தில் விளையாட்டு அரங்கம் அமைப்பது சரியல்ல என, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும் ஆட்சேபம் தெரிவித்தது. அமைப்பின் நெருக்கடிக்கு பணிந்த விளையாட்டு துறை, பட்டுத்துறை தொழிற்சாலை வளாகத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் உத்தரவை, நேற்று முன்தினம் திரும்ப பெற்றது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலர் பரசுராமேகவுடா கூறியதாவது:
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, துர்நாற்றம் மற்றும் துாசியால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, சூழ்நிலையை துாய்மையாக வைத்திருக்க, மரங்கள், செடிகள் அவசியம். நிலக்கரி சேகரித்து வைக்க, வாகனங்களின் நடமாட்டத்துக்கு போதுமான இடம் தேவை.
இங்கு விளையாட்டு அரங்கம் அமைத்தால், தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழப்பர். பட்டு நுால் உற்பத்தியும் நிறுத்தப்படும்.
இதன் விளைவாக, உலகத்தரம் வாய்ந்த, பட்டுச்சேலைகள் உற்பத்திக்கும் பின்னடைவு ஏற்படும்.
இதை மனதில் கொண்டு, இங்கு விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டாம். வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என, எங்கள் அமைப்பு, தொழிலாளர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் உட்பட, பல அமைப்புகள் ஆதரவளித்தன. எங்களின் போராட்டத்துக்கு பணிந்த அரசு, விளையாட்டு அரங்கம் அமைக்கும் உத்தரவு திரும்ப பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.





