ADDED : ஏப் 24, 2026 04:06 AM

- நமது நிருபர் -
டென்னிஸை போல டேபிள் டென்னிஸ் விளையாட்டும், உலகம் முழுதும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டை விளையாடுவதற்கு பெரிய மைதானங்கள் தேவை இல்லை; சிறிய மேஜை இருந்தால் போதும். பந்தும் மிக வேகமாக நகர்ந்து வருவதால், கவனத்தை மேம்படுத்த இந்த விளையாட்டு உதவுகிறது. இந்த விளையாட்டில், 22 வயது வீராங்கனை யஷஸ்வினி கோர்படே அசத்தி வருகிறார்.
பெங்களூரின் ஜெயநகரை சேர்ந்த இவருக்கு, ஆறு வயதாக இருந்த போதே, டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த பெற்றோர் அவரை, டேபிள் டென்னிஸ் பயிற்சியில் சேர்த்து விட்டனர். பயிற்சியாளர் அன்ஷுமன் ராய் அவருக்கு பயிற்சி கொடுத்தார். மாநில அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், தேசிய அளவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது.
பின், 15, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய போட்டிகளில், தலா ஒரு முறை தேசிய பதக்கம் வென்று அசத்தினார். அர்ச்சனா காமத், உஷா சுந்தர்ராஜ் ஆகியோருக்கு பின், தேசிய பதக்கம் வெல்லும், 3 வது கர்நாடக வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.
கடந்த, 2022ல் துனிசியா நாட்டின் ராடேஸ் நகரில் நடந்த போட்டியில், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் முத்திரை பதித்த அவர், கடந்த மாதம் இந்துாரில் நடந்த, 87வது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில், சக வீராங்கனை சின்ட்ரேலா தாஸை இறுதி போட்டியில் தோற்கடித்து, தேசிய மகளிர் பட்டத்தையும் வென்று அசத்தினார். தற்போது கோவா சேலஞ்சர்ஸ் அணியில் ஒரு அங்கமாக உள்ளார்.
பேக்ஹேண்ட் முறையில் பந்தை எதிராளிக்கு திருப்பி அடிப்பதில், யஷஸ்வினி திறமையானவராக வலம் வருகிறார்.





