ADDED : ஜூன் 12, 2026 02:59 AM

- நமது நிருபர் -:
நீச்சல் வீரர்களை உருவாக்கும் நோக்கில், அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம், இன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் சீர் குலைந்து, அழிவின் எல்லைக்கு சென்றுள்ளது. இதனால் நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெலகாவி நகரில் உள்ள, நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற வசதியாக, பெலகாவி மாநகராட்சி உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் அமைத்து, கடந்த, 2019ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இதற்காக ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இவ்வளவு செலவில் அமைக்கப்பட்ட குளம், திறந்து வைக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகியும், இதுவரை நீச்சல் வீரர்களின் பயிற்சிக்கு , திறந்து விடவில்லை.
நீச்சல் வீரர்களை உருவாக்கவும், நீச்சல் பயிற்சி பெற விரும்பும் பொது மக்களுக்கு வசதியாகவும், நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. இது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும், சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம் போல அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய பெலகாவி வடக்கு எம்.எல்.ஏ.,வின் சகோதரர் ஆசீப் செய்ட்டின் சகோதரர் பிரோஜ் செய்ட் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, மிகவும் ஆர்வத்துடன் இந்த நீச்சல் குளத்தை அமைத்தார். ஆனால், என்ன நோக்கத்துக்காக, இந்த குளம் அமைக்கப்பட்டது என்பதையே, அதிகாரிகள் மறந்துவிட்டனர்.
விளையாட்டு வீரர்களுக்கு திறந்து விடாத காரணத்தால், நீச்சல் குளம் பாழாகியுள்ளது. அழிவின் எல்லைக்கு சென்றுள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் உடை மாற்ற தனித்தனி அறைகள் உள்ளன.அண்டர் யுஜி டேங்க், பம்பிங் ஹவுஸ், பில்டர் யூனிட் என, அனைத்தும் உள்ளன.
ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு பயன்படவில்லை. இது பொது மக்களுக்கும், நீச்சல் வீரர்களுக்கும் அதிருப்தி அளித்துள்ளது.
பெலகாவியின் நீச்சல் வீரர்கள் கூறியதாவது:
எதையும் கட்டுவது பெரிய விஷயம் அல்ல. அதை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதே முக்கியம். நீச்சல் குளம் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது. எங்கள் ஊர் சிறார்களின் சாதனைக்கு, இந்த நீச்சல் குளம் படிகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எங்களை போன்ற நீச்சல் வீரர்கள், வருங்காலத்தில் சாதனை செய்யும் சிறார்களுக்கு பயன்படாமல், பாழாகி கிடப்பது கண்டு மனம் வருந்துகிறது.
நீச்சல் குளத்தை சீரமைத்து, தனியாரிடம் நிர்வகிப்பு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். சிறந்த பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். நீச்சல் வீரர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். இதனால் இங்குள்ள வீரர்களுக்கு உதவியாக இருக்கும். நீச்சல் குளத்தை சீரமைக்க பெலகாவி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட நீச்சல் குளம் மக்களுக்கு பயன்படாவிட்டால், செலவு வீணாகும். நீச்சல் குளத்தை பயன்படுத்த, அனுமதி இல்லையென்றால் எதற்காக இதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெலகாவியின், ஹனுமான் நகரில் உள்ள நீச்சல் குளம் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பொறியாளர்கள் மூலமாக, ஆய்வு செய்யப்படும். நானும் கூட அங்கு சென்று பார்வையிடுவேன். நீச்சல் குளத்தை பழுது பார்த்து, பொது மக்களின் பயன்பாட்டுக்கு விட, ஏற்பாடு செய்வோம். டெண்டர் அழைத்து தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, நிர்வகிப்பு பணிகளை ஒப்படைப்போம்.
- எம்.கார்த்திக், பெலகாவி மாநகராட்சி கமிஷனர்
