விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற கர்நாடகாவின் இருவர்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற கர்நாடகாவின் இருவர்
ADDED : ஏப் 17, 2026 04:58 AM

- நமது நிருபர் -: ஐரோப்பாவில் நடக்கவுள்ள, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ்' போட்டியில் பங்கேற்க, கர்நாடகாவை சேர்ந்த இருவர் தேர்வாகி உள்ளனர்.
சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் சார்பில், இலங்கையின் கொழும்பு நகரில், கடந்த மார்ச், 29 முதல் ஏப்ரல், 10ம் தேதி வரை, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி நடந்தது. இதில், இந்தியா உட்பட, 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனையர் விளையாடினர்.
இந்தியா சார்பில், கர்நாடகாவின் சிரிஷ்டி கிரண், பத்மபிரியா, புனித் மனோகர், பஞ்சாபின் தானிஷ் நந்தா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில், பத்மபிரியா, கர்நாடகாவில் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றும் ரமேஷ் குமார் - மாலதி பிரியா தம்பதியின் மகள்.
இந்திய அணியினர், ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தனர். மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் புனித் மனோகர், ஹாங்காங்கின் ஹிம் வாங்கிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
இரட்டையர் பிரிவில் தானிஷ் நந்தா, புனித் மனோகர் அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
மாணவியர் ஒற்றையர் பிரிவில் சிரிஷ்டி கிரண், சீனாவின் கி செய் சுவிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவில், பத்மபிரியா, சிரிஷ்டி கிரண் அணி, இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
புனித் மனோகர், சிரிஷ்டி கிரண், பத்மபிரியா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், உலகளாவிய மற்றும் பிராந்திய டென்னிஸ் அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும், 'கிராண்ட் ஸ்லாம் வீரர் மேம்பாட்டு திட்டத்திற்கு' தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில், ஐரோப்பாவில் நடக்க உள்ள, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிக்கு புனித் மனோகர், சிரிஷ்டி கிரண் ஆகிய இருவர் தேர்வாகி உள்ளனர்.
புனித் மனோகர் கூறுகையில், ''14 வயதுக்கு உட்பட்டோருக்கான விம்பிள்டன் போட்டிக்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்உள்ளது. இதுபோன்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று, நான் கண்ட கனவு நனவானது. எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
சிரிஷ்டி கிரண் கூறுகையில், ''இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விம்பிள்டனில் விளையாட வேண்டும் என்ற என் கனவும் நனவானது,'' என்றார்.





