ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூரில் இன்று அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : 'ஓசூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நகராட்சி நிர்வாகத்தின் பங்கு இன்றிமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஓசூர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.
ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டு வரியை பல மடங்கு உயர்த்தியுள்ள நகராட்சி நிர்வாகம், அதன் ஊழியர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, நகராட்சி ஊழியர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே குடிநீர் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு, தெரு விளக்குகள் எரியாமை என பல்வேறு இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஓசூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நகராட்சி அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


