ADDED : செப் 04, 2011 05:56 AM
தென்காசி : தென்காசியில் சரியான பதிவு எண்கள் பொருத்தப்படாத 32 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உத்தரவின் பேரில், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி தென்காசியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரியான பதிவு எண்கள் பொருத்தப்படாத வாகனங்களை அவர்கள் சிறை பிடித்தனர். நேற்று வரை 27 இருசக்கர வாகனங்கள், 2 சரக்கு வாகனங்கள், 3 கார்கள் உள்ளிட்ட 32 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இவை தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. இவற்றின் ஆர்.சி.புக் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.


