ADDED : செப் 15, 2011 03:36 AM
விழுப்புரம்:விழுப்புரத்தில், நிலமோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பெரியார் நகரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
சங்கத்தினருக்குச் சொந்தமான காலி இடத்தை, மோசடி செய்து வாங்கியதாக
தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த 31ம்
தேதி கைது செய்யப்பட்டார்.கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரது
ஜாமின் மனு, விழுப்புரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்
தொடர்ந்து, ஐகோர்ட்டை அணுக, தி.மு.க., வழக்கறிஞர்கள் முடிவு
செய்துள்ளனர்.இந்நிலையில், பொன்முடியின் கோர்ட் காவல், நேற்றோடு
நிறைவடைந்தது. நேற்று மாலை 3.15 மணிக்கு, கடலூர் மத்திய சிறையிலிருந்து
பொன்முடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், நீதிபதி முன்
நிறுத்தப்பட்டார்.விழுப்புரம் கோர்ட் நீதிபதி ஸ்ரீதர், பொன்முடிக்கு வரும்
28ம் தேதி வரை, காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து,
பொன்முடி மீண்டும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


