UPDATED : அக் 13, 2011 09:05 AM
ADDED : அக் 11, 2011 11:04 PM
மதுரை மேயர் பா.ஜ., வேட்பாளர் ராஜேந்திரன் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ பல்கலை இருதய பிரிவு துறை தலைவர். இவரது மனைவி, மகள்கள் அனைவரும் டாக்டர்கள். தற்போது விடுப்பு எடுத்து கொண்டு தேர்தலில் களம் இறங்கியுள்ள ராஜேந்திரன், கட்சியின் ஒன்றிரண்டு நிர்வாகிகளுடன் வீடு, வீடாக பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்காரி செய்த சாதனைகளை சொல்லி, அந்த பரம்பரையில் வந்த எனக்கு ஓட்டளித்தால், மதுரையை குஜராத் போல வளர்ச்சி பெற செய்வேன் என பஞ்ச் வசனம் பேசி வருகிறார்.
'நம்பிக்கையும் இருக்கு பயமாவும் இருக்கு!'திண்டுக்கல் மாவட்டத்தில், சுய நிதி ஆதாரம் அதிகம் உள்ளது காந்திகிராமம் ஊராட்சி. தலைவர் பதவிக்கு 10 பேர் மோதுகின்றனர். இதில், ராஜதளபதி என்பவரின் பேச்சால், வாக்காளர்கள் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக, குழம்பிப் போயுள்ளனர். சந்திக்கும் நபர்களிடம் அவர், ''இந்த முறை நான் தான் தலைவர். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே நேரத்தில் பயமாவும் இருக்கு. ஏன்னா, எனக்கு தொழில் வெளியூரில் தான் இருக்கு. ஜெயிச்சாலும் நான் நிரந்தரமா இங்கே இருக்க முடியாது. தேர்தல் வேலையை நான் சுருக்கி கிட்டேன். நான் வேகமா வேலை செஞ்சா, மத்தவங்களுக்கு டிபாசிட் போயிடும். முடிஞ்ச அளவுக்கு ஓட்டுக்களை பிரிக்கணுங்கறது தான் என்னோட நோக்கம்,'' என, கலாய்க்கிறார்.'இவரு ஜெயிப்பேன்னு சொல்றாரா அல்லது ஓட்டுக்கள பிரிப்பேன்னு சொல்றாரா? ஒண்ணுமே புரியலயே. இப்பவே கண்ணக் கட்டுதே!' என, நொந்து நூலாகிக் கிடக்கின்றனர் மக்கள்.


