ADDED : அக் 08, 2011 11:08 PM
ஊட்டி : ஓட்டு எண்ணிக்கை மையங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களை நீலகிரி கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 17ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தேர்தலுக்காக ஊரக பகுதிகளில் 412, நகரப்புறங்களில் 402 என மொத்தம் 812 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 'நகராட்சி பகுதிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தலுக்காக இரண்டு மின்னணு இயந்திரம்,' என்ற வகையில், 900 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஓட்டு சீட்டு முறை செயல் படுத்தப்பட உள்ளது. அதற்கு தேவையான 2,707 சிறிய மற்றும் 374 பெரிய ஓட்டு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு பெட்டிகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் எஸ்.பி.,நிஜாமுதீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஊட்டியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அண்ணா கலையரங்கம் மற்றும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு பணி நடந்தது. தேர்தல் அலுவலர் ரங்கசாமி, கூடுதல் எஸ்.பி., காசிவிஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் இனியன், நகராட்சி கமிஷனர் குமார், பொறியாளர் ராமமூர்த்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


