Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறுவை நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம்: கலெக்டர் அழைப்பு

குறுவை நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம்: கலெக்டர் அழைப்பு

குறுவை நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம்: கலெக்டர் அழைப்பு

குறுவை நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம்: கலெக்டர் அழைப்பு

ADDED : ஜூலை 15, 2011 12:55 AM


Google News

கடலூர் : குறுவை நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என கலெக்டர் அமுதவல்லி கூறியுள்ளார்.



அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய வேளாண்மை காப்பீடு மூலம் செயல்படுத்தப்படும் பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிவிக்கை வரப்பெற்றுள்ளது. அதன்படி 2011ம் ஆண்டு நெல் முதல் பருவ சாகுபடி (குறுவை மற்றும் சொர்ணவாரி பட்டம்) செய்துள்ள கடன் பெறாத விவசாயிகள் இன்று (15ம் தேதி) வரை இத்திட்டத்தில் சேரலாம். கடன் பெறும் விவசாயிகள் வரும் 31ம் தேதி வரை சேரலாம். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளின் காரணமாக உத்திரவாத மகசூல் அளவு குறைந்தால் நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக குறுவை சொர்ணவாரி சாகுபடி விவசாயிகள் ஏக்கருக்கு குறைந்த பிரிமியமாக 153 ரூபாய் செலுத்தினால் போதும்.



இதற்கான காப்பீடு மதிப்புத் தொகை 13 ஆயிரத்து 556 ரூபாய் ஆகும். மேலும், விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் கூடுதல் பிரிமியமாக 132 ரூபாய் செலுத்தினால் கூடுதல் தொகைக்கு காப்பீடு செய்யலாம். எனவே, பயிர் கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் மொத்தத்தில் ஏக்கருக்கு 285 ரூபாய் செலுத்தினால் 22 ஆயிரத்து 592 ரூபாய்க்கு காப்பீடு செய்யலாம். எனவே, கடன் பெறாத அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வர்த்தக வங்கிகளை அணுகி இத்திட்டத்தில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us