பதவியை காப்பாற்ற அமெரிக்காவிடம் கெஞ்சிய சர்தாரி :பாகிஸ்தான் தொழிலதிபர் அம்பலம்
பதவியை காப்பாற்ற அமெரிக்காவிடம் கெஞ்சிய சர்தாரி :பாகிஸ்தான் தொழிலதிபர் அம்பலம்
பதவியை காப்பாற்ற அமெரிக்காவிடம் கெஞ்சிய சர்தாரி :பாகிஸ்தான் தொழிலதிபர் அம்பலம்
ADDED : அக் 12, 2011 11:13 PM

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயல்கிறது. அதனால், பாக்., ராணுவத்துக்கு அமெரிக்கா 'குட்டு' வைக்க வேண்டும்' என, பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடன், கடந்த மே 2 ல், அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, மே 9 ல், பிரபல பாக்., தொழிலதிபர் ஒருவர் மூலம் அதிபர் சர்தாரி, அமெரிக்காவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தொழிலதிபர் மன்சூர் இஜாஸ், 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில் எழுதியிருப்பதாவது: பின்லாடனின் கொலை, சர்தாரி அரசின் பலவீனத்தை வெளிக் கொணர்ந்தது. உடனடியாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும் என அவர் அஞ்சினார். அமெரிக்கா சொன்னால், ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி கேட்பார் என சர்தாரி நம்பினார். அதனால், மே 10 ல், ஐ.எஸ்.ஐ.,க்குத் தெரியாமல் என் மூலமாக அமெரிக்காவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'ஐ.எஸ்.ஐ.,யின் 'எஸ்' என்ற பிரிவை, அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்புக் குழு தற்போதைக்கு கண்காணிக்க வேண்டியதில்லை. இதன் மூலம் ஆப்கன் உடனான உறவு மேம்படும்' என குறிப்பிட்டிருந்தார்.
மறுநாள், அப்போதைய அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லனும், பாக்., ராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை பாக்., ராணுவம் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து தான், தனது பிரிவுபசார விழாவின் போது, அமெரிக்க செனட்டில் பேசிய முல்லன், காபூல் தாக்குதலுக்கும், ஐ.எஸ்.ஐ.,க்குமான தொடர்புக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு தொழிலதிபர் இஜாஸ் எழுதியுள்ளார்.
இதில் இஜாஸ் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.,யின் 'எஸ்' பிரிவு என்பது, அல்-குவைதா, தலிபான், ஹக்கானி ஆகிய பயங்கரவாதக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் பயங்கரவாதிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2008ல் நிகழ்ந்த மும்பைத் தாக்குதலில், இந்த 'எஸ்' பிரிவு இருந்ததாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.


