இலவசங்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் : பொன் ராதாகிருஷ்ணன்
இலவசங்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் : பொன் ராதாகிருஷ்ணன்
இலவசங்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் : பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் எளிமையான தலைவர்கள் சிலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் மதுரையில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவரிடம், 'ஒரு ஸ்பெஷல் பேட்டி...' இன்று நாம் கேட்க, உடனே பிரசார வேனில் இருந்து குதித்து, ரோட்டோர கடை கூரை நிழலில் நமது நிருபருக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ...
தனித்து போட்டியிடுவதால் வெற்றி...?
(கேள்வியை இடைமறித்து) மகத்தான இரட்டிப்பு வெற்றி கிடைக்கும்(!). மதுரையை மட்டுமில்லாமல் பல மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம்.
திராவிட கட்சிகளை சமாளித்து நீங்கள் வெற்றி பெற முடியுமா?
திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்ததற்கும், இந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்ததற்கும் காரணம் ஊழல். ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் அல்ல. எனவே தூய்மையான நிர்வாகத்தை பா.ஜ., தவிர மற்ற எந்த கட்சியும் தரமுடியாது.
முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. இது உங்கள் வெற்றியை பாதிக்குமா?
தனித்து போட்டியிடுவது அவரவர் கட்சியின் தனித்தன்மையை அறிய உதவும். நாங்கள் ஏற்கனவே தனித்து போட்டியிட்டு குமரி, ஓசூர், ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை.
சில கட்சி வேட்பாளர்கள் இலவசங்கள் கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து இழுக்கிறார்களே?
வாக்காளர்கள் கையேந்தி பிழைக்கக்கூடாது. கட்சிகள் உங்களை(வாக்காளர்கள்) பிச்சைக்காரர்களாக நினைக்கிறார்கள். இலவசங்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பு கொடுக்க அரசு முன்வரவேண்டும்.
இத்தேர்தலில் மாநில தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்படுகிறதா?
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் கமிஷனை ஆளுங்கட்சி அச்சுறுத்தி வைத்திருப்பதாக தவறாக கருதக்கூடும். இந்த எண்ணத்தை மாற்ற தேர்தல் கமிஷனுக்கும், ஆளுங்கட்சியும் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


