நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டா? ராஜா கடும் எதிர்ப்பு
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டா? ராஜா கடும் எதிர்ப்பு
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டா? ராஜா கடும் எதிர்ப்பு
UPDATED : அக் 08, 2011 01:07 AM
ADDED : அக் 07, 2011 11:09 PM

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தன் மீது சி.பி.ஐ., கூறியுள்ள நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மறுத்துள்ளார்.
ராஜா உள்ளிட்ட அனைவர் மீதும், நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை, சி.பி.ஐ., சமீபத்தில் கூறியது.இது தொடர்பான விசாரணை, சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன், நேற்று நடந்தது.
அதில், ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார், தன் வாதத்தில் கூறியதாவது:
என் கட்சிக்காரரை (ராஜா) தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. மற்றபடி, சி.பி.ஐ.,யின் புதிய குற்றச்சாட்டில் வேறு எந்த விஷயமும் இல்லை. வேண்டுமென்றே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவடையப் போகும் சமயத்தில், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. என் கட்சிக்காரர், நம்பிக்கை மோசடி தொடர்பான எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை.
அனைத்து முடிவுகளுமே பொது நலன் கருதித் தான் எடுக்கப்பட்டன. நம்பிக்கை மோசடி என்ற குற்றச்சாட்டுக்கு, சி.பி.ஐ., தற்போது கூறியுள்ள அளவுகோல் பின்பற்றப்படுமானால், அனைத்து அமைச்சர்களுமே கைது செய்யப்பட வேண்டும்.நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளதால், ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு சுஷில் குமார் வாதாடினார்.


