ADDED : செப் 30, 2011 01:18 AM
தர்மபுரி: நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கி வாச்சாத்தி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசு துறை அதிகாரிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கி, தர்மபுரி அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தீர்ப்பு வழங்கியிருப்பதை, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் இது போல் அரசு துறை அதிகாரிகள், 215 பேருக்கு தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல் வழக்காக இருக்கும் என, மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு பிரிவுகள் குறித்து, 200 பக்கத்துக்கும் மேலான அறிக்கை, நீதிமன்றத்தில் படித்து காட்டப்பட்டு, ஒவ்வொருவரிடமும் தண்டனை குறித்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த, 15 ஆண்டாக மூன்று நீதிமன்றங்களில் வழக்கை நடத்திய சி.பி.ஐ.,க்கு, ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்கள், 18 பேருக்கும் தலா, 15 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி குமரகுரு, தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.