ADDED : ஜூலை 19, 2011 10:33 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போலீஸ் ஏட்டு வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை போனது.
நாகல் நகர் நாகயம்மாள் கோயில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (47), மோப்ப நாய் பிரிவில் ஏட்டாக உள்ளார்; மனைவி பவுனு அம்மாள் (44), நகராட்சி மருத்துவமனை நர்ஸ். இருவரும் நேற்று முன்தினம் பணிக்கு சென்ற பின், ஏழு வயது மகன் வீட்டை பூட்டி, அருகே விளையாடினான். காலை 11.30 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், நகையை திருடி சென்றனர்.
இது குறித்து போலீசார் கூறியது: பாலசுப்பிரமணியின் மூத்த மகன் வீட்டில் இருக்கும் போது, மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது நோட்டமிட்டு, சிறுவன் இருக்கும் போது நகையை திருடியுள்ளனர். இருவரும் வேலைக்கு செல்வதை அறிந்தவர்கள் தான் திருடியுள்ளனர், என்றனர். சில மாதங்களாக, திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள், நாள் தவறாமல் அரங்கேறி வருகின்றன. இவற்றை துப்பு துலக்க பல தனிப்படைகளை அமைத்தும், துளி அளவும் பயன் இல்லை. தற்போது ஏட்டு வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.


