குடிநீருக்காக இடம் பெயரும் யானைகள் : உடுமலை - மூணாறு ரோட்டில் "உலா'
குடிநீருக்காக இடம் பெயரும் யானைகள் : உடுமலை - மூணாறு ரோட்டில் "உலா'
குடிநீருக்காக இடம் பெயரும் யானைகள் : உடுமலை - மூணாறு ரோட்டில் "உலா'
ADDED : செப் 07, 2011 11:07 PM

உடுமலை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பருவமழை துவங்குவது காலதாமதமாகி வருவதால், குடிநீருக்காக வனப்பகுதியிலிருந்து, யானைகள் மூணாறு ரோடு வழியாக, அமராவதி அணைக்கு இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.
உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், அமராவதி வனசரகம் அமைந்துள்ளது. யானை, மான், சிறுத்தை உட்பட பல அரிய வகை விலங்குகள் இப்பகுதியில் உள்ளன. விலங்குகளுக்கு முக்கிய நீராதாரமாக அமராவதி அணை உள்ளது. வனப்பகுதியிலுள்ள ஓடைகள் மற்றும் வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில், தண்ணீர் வற்றும் போது, விலங்குகள் குடிநீருக்காக காலை மற்றும் மாலை நேரங்களில், அமராவதி அணைக்கு இடம் பெயர்கின்றன. காமனூத்து, புங்கன் ஓடை மற்றும் பிற பகுதிகளிலுள்ள யானைகள், நாள்தோறும் கூட்டமாக உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து, அமராவதி அணைப்பகுதிக்கு செல்கின்றன. யானைகள் ரோட்டோரத்தில் நிற்கும் போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளால் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. யானைகள் மீது பொருட்களை வீசுதல், கூச்சல் எழுப்புதல் போன்ற சேட்டைகளில் இறங்குபவர்களால் பாதிக்கப்படும் யானைகள், அப்பகுதியில் உள்ளவர்களை விரட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


