/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கைநில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
நில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
நில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
நில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : 'வீட்டுவசதி வாரிய நில ஆர்ஜிதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரகேரளம், காளப்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணர், வேலாண்டிபாளையம், கணபதி மாநகர் உள்ளிட்ட 16 கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கலெக்டர் கருணாகரனை சந்தித்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்கள் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் கருணாகரன் மற்றும் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு கிராமங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 600 ஏக்கர் நிலம் மட்டுமே திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு முதல் நில ஆர்ஜிதம் குறித்த தகவல்கள் வருவாய்த் துறை மற்றும் பதிவுத் துறை பதிவேடுகளில் உடனுக்குடன் பதிவு செய்யப்படாததால், இவை 2007ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த பணியையும் வீட்டுவசதி வாரியம் முறையாக மேற்கொள்ளவில்லை. நில ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. உரிய இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டும் அது செயல்படுத்தப்படவில்லை, என குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை கேட்ட கலெக்டர் மற்றும் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் இருவரும், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். கூட்டத்தில் எஸ்.பி., உமா, ஆர்.டி.ஓ., சாந்தகுமார், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், கண்காணிப்பொறியாளர் நாராயணமூர்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வழுக்குப்பாறை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் உள்வாடகைக்கு விடப்படுவது குறித்து வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனரிடம் கேட்டபோது,'இதுதொடர்பாக புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


