Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்ப்பு

தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்ப்பு

தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்ப்பு

தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்ப்பு

ADDED : அக் 06, 2011 10:01 PM


Google News

அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அக்கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட செயலருக்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் நகராட்சி, தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில், 15 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. அவற்றின் கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த சில தினங்களாக பிரசாரம் நடந்து வருகிறது.

இதில், ஆங்காங்கே பல பிரச்னைகள் உருவாகின்றன. நேற்று முன்தினம், 85வது வார்டுக்குரிய பகுதிகளில் நடந்த பிரசாரத்தில், மாதவரம் எம்.எல்.ஏ.,வும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலருமான மூர்த்தி, அம்பத்தூர் நகர செயலரும், எம்.எல்.ஏ., வேதாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு, 'சீட்' கொடுப்பதில் ஏற்பட்ட, 'குளறுபடி' காரணமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு பல பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, 85வது வார்டில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் எம்.எல்.ஏ., வேதாச்சலத்தை எதிர்த்து அ.தி.மு.க.,வினர் கூச்சலிட்டனர். அப்போது மாவட்ட செயலரும் மற்ற சிலரும் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காமராஜபுரத்திலும் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 'பணத்தை வாங்கிக் கொண்டு, 'சீட்' கொடுத்துள்ளார். வெற்றி வாய்ப்பிருந்தும் வேறு 'ஜாதி' என்பதால், சிலருக்கு, 'சீட்' கொடுக்காமல் புறக்கணித்துள்ளார். மேலும், 83 வார்டில் ஏற்கனவே, 'சீட்' கிடைத்த அ.தி.மு.க., வேட்பாளரை தந்திரமாக கழற்றி விட்டு, தனது மருமகள் எழில்தேவியை வேட்பாளராக்கி விட்டார். எம்.எல்.ஏ.,வின் உறவினர் என்பதால் மாவட்ட செயலரும் அதற்கு ஒத்துழைக்கிறார்' என, எம்.எல்.ஏ., வேதாச்சலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அக்கட்சியினர் கலாட்டா செய்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் வேதாச்சலம் தஞ்சம் அடைந்தார். அவரை விரட்டி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பினர். அம்பத்தூர் ராமசாமி பள்ளி அருகே, மாவட்ட செயலர் மூர்த்தியை எதிர்த்தும் அ.தி.மு.க.,வினர் பலத்த கோஷமிட்டனர்.

அடுத்து, மங்கலபுரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 'ஓட்டு கேட்டு இங்கு வராதே' என எம்.எல்.ஏ.,வை அங்கிருந்தவர்கள் எச்சரித்தனர்.

சில தினங்களுக்கு முன் பாடிக்குப்பம் பகுதியில் நடந்த பிரசாரத்தின் போதும், அங்குள்ள அ.தி.மு.க., வினரும், பொதுமக்களும் எம்.எல்.ஏ.,வின் வேஷ்டியை உருவி விரட்டினர். எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட செயலரின், 'நடவடிக்கையால்' அம்பத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசார எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகிறது.

- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us